ஒருங்கிணைந்த
தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும்
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு
பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள,
சிறப்பு பயிற்சி அளிக்கப்பட
உள்ளது.
இந்திய
உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.,
- என்.ஐ.டி., போன்ற
இன்ஜி., கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில்
சேர, நீட் தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். பல ஆண்டுகளாக நடக்கும்,
இதுபோன்ற நுழைவு தேர்வுகளில், தனியார்
பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி
பெறுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களும், இந்த
நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், பாடம்
எடுக்கும் முறையில், புதுமை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ.,
எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தில்,
'ராஷ்ட்ரீய அவிஷ்கார் அபியான்' என்ற, தேசிய செயல்வழி
கற்றல் திட்டத்தில், இந்த புதுமை திட்டம்
அமல்படுத்தப்படுகிறது. இதில், 70 ஆயிரம் ஆசிரியர்கள் சிறப்பு
பயிற்சி பெற உள்ளனர்.
ஐ.ஐ.டி., மும்பை
பேராசிரியர் அரவிந்த் குப்தா, இந்திய உயிரியல்,
சூழலியல் வல்லுனர் சுல்தான் இஸ்மாயில் போன்றோர், மாநில அளவில், 64 ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்கின்றனர்.
இவர்கள்
வழியாக, மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும்,
பின், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி
அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் பயிற்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு, 'யூ
டியூபிலும்' பதிவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து,
தமிழக ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்
அறிவொளி கூறியதாவது: பாடத்தில் உள்ள அம்சங்களை, பார்முலாக்களை
எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என, பயிற்சி அளிக்கப்படும்.
9ம் வகுப்பு முதல், பிளஸ்
2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம்
அமலாகும். இதனால், இனி வரும்
காலங்களில், அரசு பள்ளி மாணவர்கள்,
நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.